51வது ஆண்டில் மூன்றாவது முறையாக திரைக்கு வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ’வசந்த மாளிகை’ திரைப்படத்தை ரசிகர்கள் பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம், நடிகர் திலகம், செவாலியே என போற்றப்படுபவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிறப்புடையவர் சிவாஜி கணேசன். அப்போதும் சரி, இப்போதும் சரி, எப்போதும் சரி யார் நடிக்க வந்தாலும் அவர்களின் ஹீரோவாக இருப்பவர் சிவாஜி கணேசன் மட்டுமே.
அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வசந்த மாளிகை திரைப்படம் கடந்த 1972ம் ஆண்டு வெளிவந்து வெள்ளி விழா கண்டது. 50 வருடங்கள் கடந்திருக்கும் இப்படத்தை இப்போது மூன்றாவது முறையாக ரீ-ரிலீஸ் செய்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட வசந்த மாளிகை திரைப்படம் தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் வசந்த மாளிகை திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதில் ஏராளமான சிவாஜி கணேசனின் ரசிகர்கள் கலந்து கொண்டு அவருடைய புகைப்படத்தை 30 அடியில் கட்டவுட்கள் வைத்தனர். அந்த கட்ட அவுட்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான சம்பங்கி பூ மாலை அணிவித்தனர். அந்த மாலையானது பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்டது. அந்த மாலை கொண்டுவரப்பட்ட செலவு மட்டும் 15,000 செலவாகியுள்ளது.
மேலும் சிவாஜி ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து ரீ ரிலீஸ் செய்துள்ள வசந்த மாளிகை திரைப்படத்தை கண்டு களிக்க வந்து தங்களது ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய படத்தை ரீ-ரிலீஸ் செய்த தயாரிப்பாளர் நாகராஜன் கூறியதாவது:
”நடிகர் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகன் நான் நடிகர் சிவாஜி கணேசன் படத்தை மீண்டும் திரையில் கொண்டு வருவது சந்தோஷமாக உள்ளது. தொடர்ச்சியாக ஆங்காங்கே ரசிகர்கள் இப்படத்தை பார்ப்பதற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை நான் மட்டுமே 30 தடவை அந்த படத்தை பார்த்து விட்டேன். மறைந்தும் மறையாமலும் எங்கள் மனதில் அவருடைய நடிப்பின் வாயிலாக எங்களுடன் மறையாமல் தான் உள்ளார்” இவ்வாறு தெரிவித்தார்.







