‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் குறித்து கோவா திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
1990களின் தொடக்கத்தில் காஷ்மீரில் வாழ்ந்து வந்த பண்டிட்டுகளை பயங்கரவாதிகள் திட்டமிட்டு விரட்டியடித்தாக வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் தொடர் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியால் சிறந்த படம் என்று பாராட்டப்பட்ட தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு பாஜக ஆளும் பல மாநிலங்களில் வரி விலக்குகள் அளிக்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கோவா சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் பங்கேற்ற தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்தார். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம் என்றும், இப்படம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறியிருந்தார். இவரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
நாடவ் லேபிட்டின் இந்த பேச்சுக்கு மூத்த பாலிவுட் நடிகர் அனுபம் கெர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இஸ்ரேல் தூதரக அதிகாரி கொப்பி ஷோஷானியுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த விமர்சனம் முன்கூட்டியே திட்டமிட்ட ஒன்றாக தெரிவதாக தெரிவித்தார். இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட யூதர்களின் சமூகத்தில் இருந்து வந்த ஒருவர், இவ்வாறு கூறுவது வெட்கக்கேடானது என்றும், பொய்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் உண்மையை விட மிகச்சிரியதே என்றும் அவர் தெரிவித்துள்ளார். யூதர்களின் இனப்படுகொலை சரியானது என்றால், காஷ்மீர் பண்டிட்களின் வெளியேற்றமும் சரி தான் என அவர் குறிப்பிட்டார்.
இதே கருத்தை வலியுறுத்திய இஸ்ரேல் துணை தூதர் கொப்பி ஷோஷானி, தாம் தி காஷ்மிர் பைல்ஸ் திரைப்படத்தை பார்த்ததாகவும், நாடவ் லேபிட்டின் கருத்து தவறானது என்றும், பிரசார பாணியில் அப்படத்தில் காட்சிகள் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார். காஷ்மீர் மக்களின் பிரச்னைகள் அறியப்பட வேண்டும் என்று கூறிய அவர், அவரின் அந்த கருத்தை இஸ்ரேல் தூதரகம் எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்திய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் தீவிரவாத ஆதரவு கருத்துக்கள் வெளியிடப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார். தி காஷ்மீர் பைல்ஸ் படத்தில் ஒரு காட்சியோ, வசனமோ தவறு என்று நிரூபித்தால் தான் படம் இயக்குவதையே நிறுத்திவிடுவதாகவும் அவர் சவால் விடுத்தார்.
இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலோன் நாடவ் லேபிட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இத்தகைய மோசமான கருத்தை வெளிப்படுத்தியதற்காக நீங்கள் வெட்கப்படவேண்டும் என்றும், தங்களை மதித்து திரைப்பட விழாவில் தேர்வுக்குழு தலைவராக அழைத்த இந்தியர்களை மிகவும் மோசமாக அவமானப்படுத்தியுள்ளீர்கள் என்று நாடவ் லேபிட்டுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், வரலாற்று நிகழ்வு குறித்து தெரியாமல் பேசுவது அழகல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், அவருக்காக இந்திய மக்களிடம் தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே இஸ்ரேல் தூதர் கிலோனின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக நடிகை குஷ்பூ அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் பண்டிட்கள் எதிர்கொண்ட வலி குறித்து காட்சிப்படுத்தப்பட்டது திரிக்கப்பட்ட ஒன்றல்ல என்றும், அது தான் உண்மையான வரலாறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.