சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு முதல்கட்டமாக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கான விரிவான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனடிப்படையில் பெருநகர சென்னை மநாகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சர்வதேச தரத்துக்கு இணையாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், தூய்மை சென்னையின் கீழ் குப்பை மற்றும் கழிவுகளை உயிரியல் அகழ்ந்தெடுத்தல் முறையில் நீக்கி நிலத்தை மீட்டெடுத்தல், நுண்ணிய உர மையங்களை வலுப்படுத்துதல், கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் நவீன முறையில் அகற்றுதல், குடிசைப் பகுதிகளில் தேங்கும் அதிகப்படியான குப்பைக் கழிவுகளை அகற்றுதல், இறைச்சிக் கூடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் நவீன மயமாக்குதல், பசுமை சென்னையின் கீழ் மாநகரம் முழுவதும் பெருமளவில் மரங்கள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்மிகு சென்னையின் கீழ், குடிநீர் வழங்கல், நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களைப் புனரமைத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த இடமாகக் கொண்டுவருதல், எழில்மிகு சென்னையின் கீழ், பாரம்பரியக் கட்டிடங்களைப் புனரமைத்து வண்ண விளக்குகளால் ஒளிரூட்டுதல், பாலங்களின் கீழ்ப்பகுதிகள், சாலை இணைப்புகள் மற்றும் சாலை மையத்தடுப்புகள் அழகுபடுத்துதல், நகரின் உட்கட்டமைப்பு வசதிகள், புதிய சாலைகள், பாலங்கள், தெருவிளக்குகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் அமைப்பதன் மூலம் தொடர்ந்து மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த வகையில் நடைபாதைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.