ஒரு மனிதன் 31 ஆண்டுகளாக சிறையில் தன் வாழ்நாளை கழித்து உள்ளான் என்பதை ஒரு நொடியில் நின்று யோசித்து பார்த்தால் அதன் பின்னால் உள்ள வலிகள் புரியும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதையறிந்து, ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், பேரறிவாளனின் உறவினர்கள் கண்ணீர் மல்க ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர். மேலும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மகனின் விடுதலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.
விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவரும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார். 31 ஆண்டுகால போராட்டம் வெற்றி பெற்றிருப்பதை மகிழ்ச்சியாக வரவேற்கிறேன் என்ற அவர், ஒரு மனிதன் 31 ஆண்டுகளாக சிறையில் தனது வாழ்நாளை கழித்துள்ளான் என்பது சாதாரண விஷயம் அல்ல என்றார். ஒரு நொடி நின்று யோசித்தால் 31 ஆண்டுகள் சிறை வாழ்க்கையின் வலிகள் புரியும் என்றும் தெரிவித்தார். பேரறிவாளன் பரோல் மூலமாக வரும்போதெல்லாம் அவரின் உடல்நிலையை தன்னால் கவனிக்க முடிந்ததாக அற்புதம்மாள் கூறினார். மகனின் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும், முகம் தெரியாமல் உதவி செய்து வந்தவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அற்புதம்மாள் தெரிவித்தார்.