மாநகர பேருந்துகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவைக் கைவிட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரப் பேருந்துகளை படிப்படியாகத் தனியார்மயமாக்கத் தமிழ்நாடு அரசு தீர்மானித்திருப்பதாகவும், அதற்காக உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கட்டமைப்பை அடித்தட்டு மக்களிடமிருந்து பறிப்பதற்கு வகை செய்யும் இந்த நடவடிக்கை எந்த வகையிலும் ஏற்க முடியாதது எனவும் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு கடந்த 06.12.2021 அன்று கையெழுத்திட்ட,‘‘சென்னை மாநகர கூட்டாண்மை நீடித்த நகர்ப்புற சேவைகள் திட்டம்’’ என்ற தலைப்பிலான ஒப்பந்தத்தின் சில பிரிவுகள் தான் இதற்குக் காரணம் எனவும் இந்த ஒப்பந்தத்தின்படி சென்னையில் போக்குவரத்து சேவை, நடைபாதை கட்டமைப்புகள், பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசுக்கு உலக வங்கி ரூ.12,000 கடன் வழங்கும். இத்திட்டத்தின் ஓர் அங்கமாகச் சென்னையில் மொத்த செலவு ஒப்பந்தத்தின்படி 1000 பேருந்துகள் புதிதாக வாங்கி இயக்கப்படும். இவற்றைச் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்காது; மாறாக, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்படும் தனியார் போக்குவரத்து நிறுவனம் தான் புதிய பேருந்துகளை இயக்கும் எனக் கூறியுள்ளார்.
புதிய பேருந்துகளைத் தனியார் நிறுவனத்தின் ஓட்டுநர், நடத்துநர்கள் தான் இயக்குவர். அவற்றுக்கு மாதம் ஒரு தொகையைப் போக்குவரத்துக் கழகம் வாடகையாகச் செலுத்தும். இந்த முறைப்படி 2022-ஆம் ஆண்டில் 500 பேருந்துகளையும், 2024-ஆம் ஆண்டுக்குள் மேலும் 500 பேருந்துகளையும் இயக்குவதற்கு ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய திட்டம் செயல்படுத்தப்படவிருப்பதைத் தமிழ்நாடு அரசும் போக்குவரத்துத் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் ஒப்புக்கொண்டிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் முயற்சியே தவிர வேறு இல்லை எனக் கூறியுள்ள அவர்,
அண்மைச் செய்தி: ‘தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பங்களிப்பு!’
முதலில் சென்னையிலும், பின்னர் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் மொத்த செலவு ஒப்பந்த முறையை நீட்டிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. முதலில் கூடுதலாக இயக்கப்படும் பேருந்துகளில் மட்டும் இந்த முறை செயல்படுத்தப்படும். அடுத்தகட்டமாக ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் போது, அவையும் இதே முறையில் இயக்கப்படும். அத்தகைய சூழலில் அந்த பேருந்துகளுக்கான ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்கள் ரத்து செய்யப்படும். இது மறைமுகமான ஆட்குறைப்பு நடவடிக்கையாகும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டம் விரிவாக்கப்படும் போது, இனி வரும் காலங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் புதிய பேருந்துகள் வாங்கப்படாது; புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் என்ற பெயரில் தனியார் பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் தான் வசூலிக்கப்படும்; இலவச, மானியக் கட்டண சலுகைகள் தொடரும் என்றாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவையும் திரும்பப் பெறப்படக் கூடும் எனத் தெரிவித்துள்ள அவர்,மொத்த செலவு ஒப்பந்த முறையைச் செயல்படுத்துவதன் மூலம் புதிய பேருந்துகள், அவற்றுக்கான உதிரிப் பாகங்கள் வாங்குவதற்கான முதலீடு தேவைப்படாது; ஊதிய செலவுகள் குறையும் என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்க முடியாது. தொடக்கத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செலவு குறைவது போலவும், தனியாரின் பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கட்டுப்படுத்துவது போலவும் தோன்றும். ஒரு கால கட்டத்தில் நேரடி அரசு பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்து, தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தனியார் பேருந்து நிறுவனங்கள் வைத்தது தான் சட்டம் என்ற நிலை உருவாகும். அது ஆபத்தானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நேரடியாக இயக்கும் பேருந்துகளை விட, தனியார் மூலம் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, கூடுதல் கட்டணம் வசூலித்தல், போதிய வருவாய் கிடைக்காத வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க மறுத்தல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும். அப்போது அதைத் தீர்க்க முடியாமல் அரசு தடுமாற நேரிடும் எனத் தெரிவித்துள்ள அவர், உலகில் மிகச்சிறப்பான பொதுப்போக்குவரத்து கட்டமைப்பைக் கொண்டிருக்கும் பெரு நகரங்களில் சென்னை மாநகரமும் ஒன்றாகும். 50 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தையும், பின்னர் படிப்படியாகப் பிற போக்குவரத்துக் கழகங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கட்டமைப்பை மேம்படுத்தி தமிழ்நாட்டு மக்களுக்குச் சிறப்பான சேவை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.