ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதி ரூ.2 கோடி கேட்டு தயாரிப்பாளருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர். 2017-ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றித்திரிந்தது.
இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வந்து, ரகு என பெயர் வைத்து பொம்மனும், பெள்ளியும் பராமரித்து வருகின்றனர். தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானை குட்டிகளை பராமரிக்கும் பழங்குடியினத் தம்பதியின் கதையை ஆவணப்படமாக்கினார் உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ். ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ என்ற அந்த படம் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது.
இந்நிலையில் அப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதி ரூ.2 கோடி கேட்டு தயாரிப்பாளர் கார்த்திகி கொன்சால்வ்சுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், படத்திற்காக பிரதமர் மோடி, முதலமைச்சசரிடம் இருந்து தயாரிப்பாளர் சன்மானம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.படத்தில் வரும் வருமானத்தை பொறுத்து தம்பதி இருவருக்கும் உரிய வீடு. நிலம், போதுமான நிதி அளிக்கப்படும் என தாயாரிப்பாளர் தெரிவித்ததாக அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உறுதியளித்தபடி எந்த தொகையும் அளிக்கப்படாமல் இருவரும் ஏமாற்றப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.






