எந்த அரசும் செய்யாத சாதனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார் என எழுத்தாளர் இமையம் முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 3.6.2021 அன்று, ”தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்” என்று கனவு இல்லத் திட்டத்தை அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, முத்தமிழறிஞர் கலைஞரின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு கனவு இல்லத் திட்டத்தின் கீழ் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 6 எழுத்தாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கான ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வைத்து வழங்கினார்.
தமிழ் மொழியில் வெளியான தலைசிறந்த தமிழ் இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் சாகித்திய அகாதமி விருது, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ஆகிய விருதுகளை பெற்ற ந. செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், கவிஞர் புவியரசு என்கிற சு. ஜகன்னாதன், முனைவர் இ.சுந்தரமூர்த்தி, பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகம், முனைவர் கு.மோகனராசு, இமையம் என்கிற வெ.அண்ணாமலை ஆகிய ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எழுத்தாளர் இமையம், எழுத்தாளர்களை போற்றுவது, மொழியை போற்றுவதாகும். இலக்கிய பாரம்பரியம் கொண்ட முதலமைச்சர் எழுத்தாளர்களுக்காக குடியிருப்புக்கான ஆணையை வழங்கியுள்ளார். எந்த அரசும் செய்யாத சாதனையை முதலமைச்சர் செய்துள்ளார். அதிகமாக பேசுவதில்லை, காரியமாற்றுவதில் முதன்மையானவராக இருக்கிறார். எழுத்தாளரின் வாழ்க்கையில் ரூ 1.5 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்குவது சாத்தியமில்லாதது. இந்த ஆண்டு 10 பேருக்கு வழங்கியுள்ளார்கள். பாரபட்சமற்ற, நேர்மையாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.