மகளிர் உரிமைத் தொகை திட்டம் மீனை கொடுப்பது போல் உள்ளது. மீன் பிடிக்க கற்று கொடுக்க வேண்டும். மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
”நாடாளுமன்ற தேர்தலுக்கு கடந்த 6 மாதங்களாக கட்சியை பலப்படுத்தும் பணியை செய்து வருகிறோம். விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். கர்நாடகா தண்ணீர் பிரச்னையில் காவிரி நீரை தர மாட்டோம் என்று அரசு கூறுவதை எதிர்க்கிறோம். இது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாசிக்கும் எதிரானது. கர்நாடக முதலமைச்சரை தமிழ்நாட்டு முதலமைச்சர் நேரில் சந்தித்து பேச வேண்டும். தென்மேற்கு பருவமழை 30% குறைந்துள்ளது. மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், காவிரி பிரச்னைக்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ள நிலையில் எங்களுக்கு அழைப்பு வந்தால் செல்வோம். மகளிர் உரிமைத் தொகை திட்டம் நல்ல நலத்திட்டம். அதனை வரவேற்கிறோம். ஆனால் நமக்கு வளர்ச்சி திட்டம் தான் வேண்டும். மகளிர் உரிமைத் தொகை திட்டம் மீனை கொடுப்பது போல் உள்ளது. மீன் பிடிக்க கற்று கொடுக்க வேண்டும். மகளிருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுங்கள்.ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை பொறுத்த வரை நிகழ்ச்சி நடத்தியவர்கள் தான் முழு பொறுப்பை ஏற்க வேண்டும். பேராசை காரணமாக தான் இத்தனை நெரிசல்
ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து காவல் துறையினரும் இதனை அனுமதித்து இருக்கக் கூடாது. எனவே காவல் துறையும் பொறுப்பு ஏற்க வேண்டும். ஏற்கனவே நடந்த நிகழ்ச்சியை கவனித்து ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சி நடத்தியவர்களிடம் வலியுறுத்தி இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்று நிகழ்ச்சிகள் போக்குவரத்து நெரிசல் இல்லாத பரவலான இடத்தில் அனுமதி கொடுக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். டெங்கு காய்ச்சலால் யாரும் உயிரிழக்க கூடாது. அதேபோல் நிபா வைரஸ் குறித்து கவனத்துடன் செயல்பட வேண்டும். கேரளாவில் இருந்து வருபவர்களை சோதனை செய்து அனுமதிக்க வேண்டும்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கூட்டத்தொடரில் நடைமுறைக்கு கொண்டுவர வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். தேசிய கட்சிகளுக்கு தான் அது சாதகமாக இருக்கும், மாநில கட்சிகளுக்கு பாதகமாக இருக்கும். அனைத்து இடங்களிலும் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றாகவும் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் ஒன்றாகவும் நடத்தினால் சரியாக இருக்கும்.
என்எல்சி மூன்றாவது சுரங்கம் அறிவித்து உள்ளனர். இது வரக்கூடாது என்று 100% மக்களும் எதிர்க்கிறார்கள். இது காவிரி டெல்டா பகுதியில் வருகிறது. காவிரி டெல்டாவில் புதிய நிலக்கரி சுரங்கங்கள் வர தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என்று முதலமைச்சர் தெரிவித்தார். இதன்படி மூன்றாவது சுரங்கத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
உணவு தட்டுப்பாடு காலம் வரும் போது நிலம், மண், தண்ணீர் தேவை. மின்சாரத்திற்கு நிலத்தை மண்ணை கொடுக்க போகிறீர்களா? இன்று நிலத்தையும் மண்ணையும் அழித்துவிட்டு நாளை யாரிடம் உணவுக்கு பிச்சை எடுக்க போகிறீர்கள்? இது முழுமையான முட்டாள்தனம் பாட்டாளி மக்கள் கட்சி இதனை முழுமையாக எதிர்க்கும். மண்ணுக்கும் மக்களுக்கும் எந்த தியாகம் செய்யவும் பாமக தயாராக உள்ளோம்.”
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.