”ஆளுநரை இபிஎஸ் சந்தித்ததன் உண்மையான காரணம் இதுதானா?”- அமைச்சர் தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்வி

சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற…

சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து திமுக அரசு குறித்து பல்வேறு புகார்களை தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். தாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்பதை காட்டிக்கொள்ள பாஜக முயற்சி எடுத்துவரும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்க முடியாத எடப்பாடி பழனிசாமி, தற்போதுதான் ஞானோதயம் வந்தவர் போல், எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து வந்திருப்பதாகக் கூறினார். அதிமுக யாரை கொழுகொம்பாக பற்றியிருக்கிறதோ அந்த பாஜகதான் அவர்களுக்கு சத்ருவாக மாறியிருப்பதாகவும் தங்கம் தென்னரசு விமர்சித்தார்.

பாஜகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனைகளை திசை திருப்ப எடப்பாடி பழனிசாமியை கருவியாக பயன்படுத்தி நடத்தப்படும் நாடகம்தான் இந்த சந்திப்பா என்கிற சந்தேகம் எழுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனையில் தனக்கு சாதகமான நிலை வருவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்திருக்கலாம் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக நடத்தி வருவதாகக் கூறிய தங்கம் தென்னரசு,  சட்டம் ஒழுங்கு குறித்து புகார் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்றார். கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், சாத்தான்குளம் இரட்டைபடுகொலை சம்பவம் உள்ளிட்டவற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டினார். சமீபத்தில் நடைபெற்ற கோவை சிலிண்டர் வெடிப்பு குறித்து தமிழக போலீசார் உரிய விசாரணை நடத்தியதாக கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த சம்பவத்தோடு தொடர்புடைய 5 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில் என்.ஐ.ஏ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்ததையும் சுட்டிக்காட்டினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.