விளவங்கோடு எம்.எல்.ஏ-வாக தாரகை கத்பர்ட் பதவியேற்பு!

விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட் இன்று எம்எல்ஏ-வாக பதவி ஏற்றுக் கொண்டார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கன்னியாகுமரி மாவட்டம்,  விளவங்கோடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்…

விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட் இன்று எம்எல்ஏ-வாக பதவி ஏற்றுக் கொண்டார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கன்னியாகுமரி மாவட்டம்,  விளவங்கோடு காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த விஜயதரணி,  அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.  அதைத் தொடர்ந்து அவர் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்தார்.  இதனையடுத்து காலியாக இருந்த விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல், மக்களவைத் தோ்தலுடன் நடைபெற்றது.

இத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட்,  பாஜக சார்பில் வி.எஸ்.நந்தினி,  அதிமுக சார்பில் ராணி,  நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.  இதில்,  காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாரகை 91,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  இந்நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட் சட்டப் பேரவையில் இன்று உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்,  சபாநாயகர் அப்பாவு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு,  பொன்முடி, காங்கிரஸ் தமிழக கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.