அஞ்சல் படிவங்களில் தமிழ் நீக்கம்; எம்.பி கண்டனம்

அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டுள்ளதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அஞ்சல் துறையில் பண விடை தமிழில் அச்சடிக்கப்பட்டு வந்தது. ஆனால், மின்னணு படிவங்கள்…

அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டுள்ளதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“அஞ்சல் துறையில் பண விடை தமிழில் அச்சடிக்கப்பட்டு வந்தது. ஆனால், மின்னணு படிவங்கள் வந்தவுடன் பண விடையில் தமிழுக்கு விடை கொடுக்கப்பட்டுவிட்டது. சேமிப்புகளுக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் அகிய படிவங்களும் தமிழில் இருந்தன. தற்போது இல்லை.

அலைபேசிகளில் தமிழ் எழுத்துக்களை பதிவிறக்கம் செய்து பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் பரவலாக நடைமுறையில் உள்ளது. வணிக நோக்கங்களுக்காக பெரிய தனியார் நிறுவனங்கள் கூட தமிழில் உரையாட, தமிழில் செய்தி பரிமாற தொழில்நுட்ப ஏற்பாடுகளை தருகிறார்கள் அனால் ஒரு அரசுத் துறை சாதாரண மக்களின் இதய நாளமாக விளங்க வேண்டிய துறை மக்கள் சேவை என்ற நோக்கில் இருந்தும் செய்யவில்லை. லாப நோக்கிலும் கூட செய்யவில்லை என்றால் அலட்சியம் என்பதா? பாரபட்சம் என்பதா? திணிப்பு என்பதா?

முதலாவதாக, நமது தேசம் மொழிப் பன்மைத்துவம் வாய்ந்தது. அரசு அலுவலகங்கள் இந்த பேருண்மையை உள்வாங்கி தங்களை அணுகும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை எளிதில் பெற வழிவகை செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, வாடிக்கையாளர்கள் ஒரு சேவையை பெறும்போது அதற்கான விதிகளை நிபந்தனைகளை முழுமையாக அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுவே எந்தவொரு ஒப்பந்தத்தின் அடிப்படைத் தேவையாகும். அவர்கள் அஞ்சல் சேமிப்புகளை எடுக்கும்போது இரு தரப்பிற்கும் உள்ள பொறுப்புகள் தெளிவாய் பகிரப்பட வேண்டும். இல்லையெனில் பின்னர் கிச்சில்கள் எழும். இதில் வாடிக்கையாளர்களே கடைசியில் பலி ஆவார்கள்.

https://twitter.com/SuVe4Madurai/status/1445249981598683143

மூன்றாவது, இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழிகளில் சேவையை தருவது ஒன்றிய அரசு நிறுவனங்களின் கடமையாகும்.

நான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இரமணா தெரிவித்துள்ள கருத்துக்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சாதாரண குடிமகன் வழக்கு விவரங்களை தெரிந்துகொள்ளும் சூழல் உருவாக்கப்படுவதே நீதி வழங்கல் முறைமை மீது நம்பிக்கையை உருவாக்கும் என்பதெ அவர் கருத்தின் சாரம்.

எனவே வாடிக்கையாளர் சேவை தொடர்பான எல்லா படிவங்களும் – பண விடை, சேமிப்புகளுக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் ஆகிய படிவங்கள் உட்பட – தமிழில் இருப்பதையும், அதற்கேற்ற தொழில்நுட்ப ஏற்பாட்டை இணைய வழியில் தருவதையும் உறுதி செய்ய வேண்டுகிறேன். இந்த கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படுமென்று நம்புகிறேன்.” என தனது அறிக்கையில் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.