தமிழ்நாட்டில் புதிதாக 1,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருந்தது. இந்நிலையில் திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 1,728 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,52,856 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 662 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27,05,696 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 10,364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,796 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டங்களை பொறுத்தவரை சென்னையில் 876 பேருக்கும் கோயம்புத்தூரில் 105 பேருக்கும் செங்கல்பட்டில் 158 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல 118 பேர் மாநிலம் முழுவதும் ஒமிக்ரான் தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 100 பேர் குணமடைந்துள்ளனர். 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை 3 வகையாக தரம் பிரித்து சிகிச்சை வழங்குவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில்,
முதல் வகை – தடுப்பூசி செலுத்திய பிறகும், கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு அறிகுறி இல்லாமல் இருப்பவர்களை வீட்டுக் கண்காணிப்பில் வைக்க வேண்டும்
2-ம் வகை – தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல், லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதியானால் அவர்களை கண்காணிப்பு மையங்களில் வைத்து சிகிச்சை வழங்கலாம்
3-ம் வகை – கடும் அறிகுறி இருப்பவர்கள், கட்டாயம் மருத்துவ சிகிச்சை தேவை என கருதப்படுபவர்கள் மட்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளது.