தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், நீட் விலக்கு மசோதா இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இன்று வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்!, #NEET விலக்கு கோரும் சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ”அரசியலமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் உடனடியாக இதனைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிடுவார் என நம்புகிறேன்” என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி ஆளுநரின் கடிதத்தை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார்.
சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பேசிய சபாநாயகர் அப்பாவு, கடந்த 1ஆம் தேதி ஆளுநரிடம் இருந்து நேர்முகக் கடிதம் கிடைக்கப்பெற்றதாக கூறினார். ஏ.கே.ராஜன் குழு அறிக்கை யூகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்
அதன் அறிக்கை ஏற்கத்தக்கதாக இல்லை என ஆளுநர் கூறியுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நீட் குறித்த உயர்மட்டக்குழுவின் பார்வை காமாலைக் கண் போன்று உள்ளது என்றும், உயர்மட்டக் குழுவின் அறிக்கை விநோதமான, புரிந்துகொள்ள முடியாத கோட்பாடு என்றும் ஆளுநர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு கூறினார். மேலும், ஆளுநரின் கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது ஏற்புடையதா என்பதை தெரிவிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
காலை 10 மணிக்குத் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய சபாநாயகர் அப்பாவு “ஏ.கே. ராஜனின் அறிக்கையை ஒரு தலைபட்சமானது என்ற ஆளுநரின் கருத்துக்களை ஏற்கமுடியாது” என்று தெரிவித்தார். பின்னர் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆளுநர்களின் கருத்தை கேட்ட பின்னரே உயர்மட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை எட்டாக் கனியாக மாற்றியுள்ளது. உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இந்த சட்ட முன் வடிவை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்” என்று கூறினார்.
அதன் பிறகு பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆளுநரின் நோக்கத்தில் தவறில்லை என்று தெரிவித்தார். பின்னர் அவருக்கான நேரம் பின்னர் ஒதுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதனையடுத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரயைிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், நீட் தான் உண்மையான சமூகநீதி என்று தெரிவித்தார்.
இதர கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நீட் மசோதா மீதான கருத்துக்களைக் கூற வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போது பேசிய புரட்சி பாரதம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் கார்த்தி கிராமப்புற மாணவர்கள், மற்றும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், சமூகநீதியின் பிறப்பிடமே தமிழகம்தான், நீட் இந்த மண்ணிலிருந்து விலக்க வேண்டும் என்றும் நீட் விலக்கு மசோதாவிற்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு தருவதாகத் தெரிவித்தார்.
மனித நேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜவஹிருல்லா பேசும் போது, இந்தியாவிற்கு ஆளுநர் தேவையில்லை; ஏ.கே. ராஜன் குழு கொடுத்த அறிக்கையைக் காமாலை பார்வை என்று கூறுவதா என்ற கேள்வியை எழுப்பினார். மேலும் நீட் விலக்கு மசோதாவிற்கான தனது ஆதரவையும் தெரிவித்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர் டி.ராமச்சந்திரன் பேசுகையில் ஆளுநரின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது என்று தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் நீட் விலக்க மசோதாவை முழுமையாக ஆதரிப்பதாகக் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய மார்சிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி குறிப்பிடுகையில் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது, மக்களின் மனதை வேதனைக்குள்ளாகியிருக்கிறது என்று தெரிவித்தார். அதன்பிறகு, பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்ட முன்வடிவு ஒருமனதாக ஏற்கப்பட்டதாக அறிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.