இந்தியாவின் ஆன்மிகத் தலைநகர் தமிழ்நாடு என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
12வது இந்திய மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு கருத்தரங்கம் சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது. மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு பல்வேறு சாதனைகளை புரிந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முந்தைய காலங்களில், புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள் புதிய திட்டங்களை அறிவிப்பதற்கும் அதற்கு நிதி ஒதுக்குவதற்கும் ஓராண்டு காலத்தை செலவிடுவார்கள் என குறிப்பிட்ட ஆளுநர் ஆர்.என். ரவி, 4ம் ஆண்டு வரும்போது அனைத்தையும் மறந்துவிட்டு தேர்தலை எதிர்கொள்வது பற்றியே யோசிப்பார்கள் என்றார்.
தேர்தலுக்குப் பிறகு அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள், மீண்டும் முதலில் இருந்து இதேபோல் செயல்படுவதுதான் நமது நாட்டின் வழக்கமாக இருந்ததாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்காமல், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி சிந்தித்து செயல்படுவதாக ஆர்.என். ரவி குறிப்பிட்டார். அடுத்த 25 ஆண்டுகளில் உலகிற்கு வழிகாட்டும் நாடாக இந்தியா திகழ வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என தெரிவித்த ஆளுநர், அதனையே, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பிரதமரின் முழக்கம் வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா, 150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியதை சுட்டிக்காட்டிய ஆளுநர் ஆர்.என். ரவி, இதுதான் புதிய இந்தியா என தெரிவித்தார்.
இந்தியா பல்வேறு சாதனைகளை புரிந்து வருவதாகத் தெரிவித்த ஆளுநர் ஆர்.என். ரவி, இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு விளங்குவதாகக் குறிப்பிட்டார். இந்தியா குறித்த பார்வையை உணர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய பெரியவர்கள் பலரும் இதைத்தான் கூறி இருக்கிறார்கள் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.