சாதாரண மனிதன் முதலமைச்சர் ஆனதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தம்மைப் பற்றி எதிர்க்கட்சியினர் அவதூறு பேசுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் கண்ணீர்மல்க தெரிவித்தார்.
சென்னை ராயபுரம் கல்மண்டபத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில், இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவது, ஒரு அரசின் கடமை. அந்த கடமையை அதிமுக அரசு சிறப்பாக செய்துள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் தொழில்வளம் சிறப்பாக உள்ளதாகவும் தொழில்துறையில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக, தமிழகம் உள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து சென்னை திருவொற்றியூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர், தனது தாயாரை இழிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டு கண்கலங்கினார். சிறிது நேரம் பேச முடியாமல் தலை கவிழ்ந்து நின்ற அவர், பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து கேட்டுக்கொள்கிறேன், திமுகவை வெற்றிபெற விடகூடாது எனகேட்டுக் கொண்டார்.







