தொழில்நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பக்கத்தில் நடைபெற்ற தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்றைக்கு நமது ஆட்சியின் இலக்காக, அனைத்துத் துறையிலும் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாடாகக் கொண்டுள்ளோம் என்றால், அதற்கு அரசியல்-சமூகவியல் மட்டுமல்ல பொருளாதாரமும்-தொழில் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவுக்குப் பல்வேறு வகைகளில் தமிழ்நாடு தான் முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது. தொழிற்சங்க இயக்கம் என்பது இங்கு தான் முதன் முதலாக உருவானது. ஆங்கிலேயர்கள் அதிகப்படியான தொழிற்சாலைகளை இங்கு உருவாக்கினார்கள். அரசியல் உரிமையை மட்டுமல்ல; தொழிலாளர் உரிமையையும் தமிழ்நாடு கேட்டுப் போராடியது. தூத்துக்குடியில் இருந்த ஹார்வி ஆலையில் தொழிற்சங்கத்தை 1905-ம் ஆண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் உருவாக்கினார்.
அந்த மாவீரர் சிதம்பரனாருக்கு இன்று, நினைவு நாள். சென்னை பக்கிங்காம் கர்நாடிக் ஆலை-ஆகிய இடங்களில் தொழிலாளர் போராட்டங்கள் நடந்தது. இதன் காரணமாக, தொழிலாளர் ஒற்றுமை மட்டுமல்ல-தொழிலாளருக்கான சலுகைகள்-சட்டங்கள் ஆகியவை உருவானது. இன்னொரு பக்கத்தில், தொழில் அதிபர்களும் தொழிலாளர்களுக்கு தேவையானவற்றை வழங்கவும், தங்களது தொழில்களை வளர்க்கவும் முயற்சிகள் எடுத்தார்கள். அப்படி உருவானது தான் தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு.
இன்று சுமார் பத்து லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த தென் இந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு, சிறப்பாகச் செயல்பட்டு, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக, 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 15 மாத காலத்தில் தமிழகத்தில் புதிய தொழில்கள் ஏராளமாக உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழக எல்லையைத் தாண்டி பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க வருகிறார்கள். அந்த வகையில் தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அரசு, தொழில் அதிபர்கள்-தொழிலாளர்கள் ஆகிய முத்தரப்பும் கைகோத்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு உயரும். இதுவே இந்த அரசினுடைய குறிக்கோள். இவற்றை நோக்கியே நாம் பயணிக்கிறோம் என்று கூறினார்.