தனித்துவமான கல்வி கொள்கையை வகுப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்க வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் நவீன வசதிகளோடு புதிய விடுதிகள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தனித்துவமான கல்வி கொள்கையை வகுப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பல சிறந்த பெண் ஆளுமைகளை வழங்கிய பெருமை சென்னை பல்கலைக்கழகத்திற்கு உண்டு எனக்கூறிய அவர், பட்டமளிப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்திருப்பது பெருமைக்குரியது.
அறிஞர் அண்ணாவும், தானும் இந்த பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் என குறிப்பிட்டார். இந்தியாவில் தலை சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 20க்கு மேற்பட்ட பல்கலைகழகங்ககள் தமிழ்நாட்டில் உள்ளன. தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 தமிழ்நாட்டில் உள்ளன. தலைசிறந்த 30 சட்டக்கல்லூரிகளில் 2 தமிழ்நாட்டில் உள்ளன, தலைசிறந்த 40 மருத்துவக்கல்லூரிகளில் 9 தமிழ்நாட்டில் உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், நூறாண்டுகளுக்கு முன்பு நீதி கட்சி காலத்தில் போட்ட விதையே காரணம் என சுட்டிக்காட்டினார்.
இதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழில் வரவேற்று பேசினார். பின்னர் ஆங்கிலத்தில் பேசிய அவர், நம் நாடு பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருவதால் மாணவர்களின் கனவும் பெரிதாக இருக்க வேண்டும் என கூறினார். பெரிய இலக்குகளை வைத்து அதனை அடைய மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும் எனக்கூறிய அவர், திருவள்ளுவரின் குறளை சுட்டிக்காட்டி பேசினார். மேலும், மாணவர்கள் வளர்ந்ததால்தான் நாடும், நகரமும், குடும்பமும் வளரும் என தெரிவித்தார்.
இதனை அடுத்து பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாட்டில் கோயில்களின் கட்டமைப்பு மற்றும் சிலை வடிவமைப்பு சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார். டாக்டர்.ராதாகிருஷ்ணன், சக்கரவர்த்தி ராஜகோபால சாரி, உள்ளிட்டோர் சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் என சுட்டிக்காட்டிய அவர், சரோஜினி நாயுடு உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமையாக கருதுகிறேன் என குறிப்பிட்டார். சென்னை பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களின் பெண்கள் சிறப்பு வாய்ந்தவர்கள் என குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், கலாச்சார ஆராய்ச்சியை சென்னை பல்கலைக்கழகம் ஊக்குவிக்கிறது. “சுப்பிரமணிய பாரதி சென்னது போல் மந்திரம் கற்போம்”என தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா