தொடர்வண்டித்துறை தேர்வினை எழுதத் தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருக்கும் தேர்வர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக தேர்வர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு அமையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஒன்றிய அரசின் கட்டுபபாட்டில் உள்ள தொடர்வண்டித்துறையில் நிரப்பப்படாமல் உள்ள 24 ஆயிரம் பணியிடங்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு, தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வருகிற 9-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்விற்காக தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கி, தேர்வு நுழைவு சீட்டினை அனுப்பி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாமக்கல்லில் விண்ணப்பித்தவர்களுக்கு கர்நாடக மாநிலம் உடுப்பியிலும், ஈரோட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆந்திர மாநிலம் நெல்லூரிலும் மற்றும் பலருக்கு வட மாநிலங்களில் தேர்வு அமையும் ஒதுக்கப்பட்டுள்ளது. பணியாளர் தேர்வு வாரியம் வேண்டும் என்றே ஆயிரம் கி.மீட்டருக்கு அப்பால் தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளது. இந்த தேர்வு மையங்களை தமிழகத் தேர்வுர்கள் கண்டறிவதில் மிகப்பெரிய நடைமுறை சிக்கல் உள்ளதாகவும் சீமான் தெரிவித்துள்ளார். தற்போது, கொரோனா மூன்றாவது அலை வேகமாக அதிகரித்து வருவதால் வட மாநிலங்களுக்கு பயணிப்பது, கடினமானது என்றும், இது தமிழக தேர்வர்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி உளவியலாக அவர்களை சிதைத்து தோல்வியுற செய்வதற்கு மற்றும் அவர்களை தேர்வுகளில் இருந்து வெளியேற்றுவதற்கு தொடுக்கப்படும் இனவாத தாக்குதலே என்றும் சாடியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு தொடர்வண்டித்துறையின் முதல் நிலை தேர்விலும் இதேபோல் வேறு மாநிலங்களில் தேர்வு மையங்களை அமைத்து அறிவிப்பு வெளியான போது, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டம் தெரிவித்ததையடுத்து, அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்து குரல் கொடுத்த திமுக, தற்போது ஆட்சியில் இருந்தும் மவுனமாக இருப்பதற்கு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதும் தமிழக தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதுவதற்கான மையங்களை அமைத்து தர இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை தொடர்வண்டித்துறை தேர்வினை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.