நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில், நிச்சயம் வெற்றி பெறுவோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை தனியார் பள்ளியில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்ற பின் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறோம் நிச்சயம் இறுதியில் வெற்றி அடைவோம் என தெரிவித்தார்.
தொடர்ந்துபேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது ஆனால் முறையாக அதை கவனிக்கவில்லை. தற்போது, ஓய்வு பெற்ற நீதியரசர் ராஜன் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளவற்றை முழுமையாக ஆய்வு செய்து முதலமைச்சர் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உரிய நடவடிக்கை எடுப்பார் என உறுதிபட கூறினார்.
தமிழ் வழியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், தமிழ் வழியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.







