டி20 உலக கோப்பை போட்டியில் ஜிம்பாவேவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனால் அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. இதில் குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித சர்மா, கே.எல் ராகுல் களமிறங்கினர். ரோகித் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ராகுல் அரை சதமடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 26 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இறுதியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில்6 பவுண்டரி 4 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாவே அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான மதவரா முதல் பந்தில் டக் அவுட் ஆனார். சக்கப்வாவும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் எர்வின் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
தொடர்ந்து விளையாடிய சிக்கந்தர் ராசா 34 ரன்களும், ரியான் பர்ல் அதிகபட்சமாக 35 ரன்களும் எடுத்தனர். ஆனால் கடைசி வரையில் ஜிம்பாப்வே அணியால் வெற்றி இலக்கிற்கு அருகில் கூட வர முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, இறுதியில் 17.2 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது.
இதனால், 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. இதன் மூலம் இந்திய அணி குரூப்1 பிரிவில் 2ம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியுடன் அரையிறுதி ஆட்டத்தில் வரும் வியாழக்கிழமை மோத உள்ளது.