கட்டாய மதமாற்றத்தால் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து- உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

கட்டாய மதமாற்றத்தால் நாட்டின் பாதுகாப்பிற்கும் மத சுதந்திரத்திற்கும் ஆபத்து ஏற்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.  கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மூத்த வழக்கறிஞர் அஷ்வினிகுமார் உபாத்யாய்…

கட்டாய மதமாற்றத்தால் நாட்டின் பாதுகாப்பிற்கும் மத சுதந்திரத்திற்கும் ஆபத்து ஏற்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மூத்த வழக்கறிஞர் அஷ்வினிகுமார் உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை,  நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கட்டாய மதமாற்றம் மிகவும் முக்கியமான பிரச்சனை என நீதிபதிகள் தெரிவித்தனர். கட்டாய மதமாற்றத்தை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகவும் கடினமான சூழல் உருவாகிவிடும் என்று தெரிவித்த நீதிபதிகள், கட்டாய மதமாற்றத்தால் நாட்டின் பாதுகாப்பிற்கும் மதச் சுதந்திரத்திற்கும் ஆபத்து ஏற்படும் என எச்சரித்தனர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், கட்டாய மதமாற்றத்தை தடுக்க மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் என்ன  என்பது குறித்து வரும் 22ந்தேதிக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.