29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

உயிரிழப்பு எண்ணம் வருகிறதா? அப்போ இந்த படத்தை பாருங்க..

வாழ்வில் மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு வெறுமையின் உச்சத்தில் உயிரை மாய்த்துக் கொள்வதுதான் ஒரே வழி என்ற எண்ணத்தில் நீங்கள் இருந்தால், நீங்கள் பார்க்க வேண்டிய மலையாளப் படம்தான் ‘சன்னி’.

ஒரு தனிமனிதனின் உளவியல் போராட்டத்தை ஒரு நேர்த்தியான ஓவியத்தைப்போல படைப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் சங்கர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

படத்தின் கதை

வியாபாரத்தில் நண்பரால் ஏமாற்றப்பட்டு கடனில் மூழ்கிய சன்னி (ஜெய் சூர்யா) துபாயில் இருக்கும் தனது அனைத்து உடைமைகளையும் விற்ற பிறகு கொச்சினுக்கு திரும்புகிறார். கொரோனா உச்சத்தில் இருந்த காலம் என்பதால், ஆடம்பர நட்சத்திர விடுதியில் ஒரு அறை எடுக்கிறார். ஒரு பக்கம் கொரோனா ஊரடங்கால் ஏற்படும் தனிமை, மறுபக்கம் விவாகரத்து கோரும் கர்ப்பிணி மனைவி என பல்வேறு சிக்கலில் தவிக்கும் சன்னி, ஒரு கட்டத்தில் உயிரை மாய்த்துக் கொள்வது என்ற முடிவை நாடுகிறார். இதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார்? என்பதுதான் படத்தின் கதை.

’மாஸ்டர் பீஸ்’

மாஸ்டர் பீஸ் என்பார்களே அப்படி செதுக்கப்பட்டிருக்கிறது படத்தின் மேக்கிங். ஒளிப்பதிவு, கதை கொண்டு செல்லும் முறை, பின்னணி இசை, படத்தின் பாடல், வசனங்கள் என்று அத்தனையும் கிளாசிக் ரகம்.

நட்சத்திர விடுதியில் ஒருவர் எப்படி நடந்துகொள்வார். பாத்ரூம் ஷவரின் தண்ணீரை மது கோப்பையில் கலக்கும் காட்சி. வெள்ளை துண்டுடன் கையில் மது பாட்டிலை ஏந்தி கடலை நோக்கிய பால்கனியில் சன்னி நிற்கும் காட்சியில் தான் படத்தின் டைட்டில் கார்டு தொடங்குகிறது.

மது கிடைக்காமல் போகும் வேளையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கும் காவல்துறை அதிகாரியை அழைத்து தனக்கு மதுவேண்டும் என்றும், நான் ஒரு இந்திய நாட்டின் பிரஜை, இதற்காக போராடுவேன் என்ற காட்சியில் ஜெய்சூர்யாவின் நடிப்பு அசத்தல். படத்தில் ஜெய்சூர்யாதான் முழுவதுமாக பயணிக்கிறார். இதைத்தவிர பிரதான கதாபாத்திரங்கள் அனைவரும் குரல் மூலமாகவே படத்தில் பயணிக்கின்றனர்.

எதிர்பாராத நேரத்தில் சன்னியின் பால்கனியில் வந்து விழும் மஞ்சள் துப்பட்டா. அதன் மூலம் அறிமுகமாகும் அதிதி என்ற பெண். அதிதிக்கும் – சன்னிக்கும் நடைபெறும் உரையாடலில் ‘தனக்கு திருமணமாகவில்லை’ என்று சன்னி வெட்கத்துடன் சொல்வதும். ’என்னால் மாடியிலிருந்து உங்கள் விரலில் இருக்கும் கல்யாண மோதிரத்தை பார்க்க முடிகிறது’ என்று அதிதி சொல்லும் காட்சியும் சரி, என்னிடம் கடைசியாக இரண்டு சிகரெட்டுகள்தான் இருக்கிறது, உனக்கு ஒன்று தருகிறேன் சன்னி என்று அதிதி சொல்லும் காட்சியிலும், இயக்குநர் ஸ்கோர் செய்திருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவு

விடுதியின் பால்கனியில் நின்று கொண்டு கொட்டும் மழை துளியை சன்னி குடிக்க முயற்சிப்பார். இந்த காட்சியில் ஒளிப்பதிவு அட்டகாசம். ஒருவர் மட்டுமே பயணிக்கும் கதையில், ஒளிப்பதிவு செய்வது மிகவும் சவாலான விஷயம். படத்தின் அனைத்து கோணங்களிலும் காட்சிகளிலும் மது நீலகண்டனின் ஒளிப்பதிவு மெச்சத்தகுந்ததாக இருக்கிறது.

ஜெய்சூர்யா எனும் என்சைக்ளோபிடியா

கொரொனா காலத்தில் யாராவது நம்மிடம் பேசமாட்டார்களா என்று ஏங்கிய ஒரு மனநிலையை அனைவருமே கடந்திருப்போம்; அந்த நொடிகளை இப்படம் மீண்டும் நினைவுப்படுத்தியிருக்கிறது. ஜெய்சூர்யா நடிப்பின் ’என்சைக்ளோபிடியா’. எந்த இடத்தில் எப்படி உணர்வுகளை வெளிப்படுத்துவது, உடல் மொழி, வசனங்களை பேசும் தொனி என்று சகல நிலையிலும் அவரது நடிப்பு அட்டகாசம்.

சன்னியின் மனநல ஆலோசகராக வரும் மருத்துவர் இராலி. அவர் தொலைபேசி மூலமாக சன்னியிடம் தொடர்ந்து பேசுவார். வாழ்வில் மீட்பர்கள் எப்படி வருவார்கள் என்று நமக்கே தெரியாது. அதுபோலத்தான் சன்னிக்கு, இராலி என்ற மருத்துவரும் படத்தில் அமைந்துவிடுகிறார். தான் தனியாக இருக்கும் அவஸ்தையை நீயும் அனுபவிக்க வேண்டும் என்று ஒரு எறும்பை கண்ணாடி கோப்பையால் மூடுவார் சன்னி. சில நாட்களுக்கு பிறகு அந்த எறும்பை விடுவித்து சர்க்கரையை அதன் மீது தூவி மன்னிப்பு கேட்பார். ஒரு மனிதனின் ஆழ்மன உணர்வுகளை இதுபோன்ற காட்சிகள் மூலம் அப்படியே இயக்குநர் காட்சிகளாக மாற்றியிருக்கிறார்.

படத்தின் கிளாஸிக் வசனங்கள்

‘ஏன் உயிரிழப்பு செய்ய வேண்டும்’ என்று மருத்துவர் இராலி கேட்பார்

‘வாழ்வதற்கு எந்த விருப்பமும் இல்லை, இந்த காரணம் போதாதா’ என்பார் சன்னி .’அழைத்து பேச நெருக்கமாக யாரும் இல்லாதவர்கள் யாரை அழைப்பது’
‘இது என் அப்பா பயன்படுத்திய நம்பர் அதனால் அழைத்தேன்’

‘உனக்கு மரணமடைந்த மகள் இருக்கிறாள்; இனி பிறக்கபோகும் மகள் இருக்கிறாள்; நீ யாரை பார்க்க வேண்டும் என்பதை நீயே முடிவு செய் சன்னி’

நாம் கடந்து வந்த எல்லா கடினமான நேரங்களின் நினைவுகளும் நம் கண்முன்பே வந்து செல்கிறது. ‘குண்டுகள் பொழிந்த வானத்தில்தானே வெள்ளை புறாக்களும் பறக்கிறது’ என்பதுதான் இந்த வாழ்க்கை.

ஒரு படைப்பு ஒரு மனிதனை தாழ்வு மனப்பான்மையிலிருந்து, வெறுமையிலிருந்து மீட்குமாயின் அதுவே சிறந்த படைப்பாக இருக்க முடியும். அதுதான் ‘சன்னி’.

– வாசுகி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading