சுகேஷ் சந்திரசேகர் எனது உணர்ச்சிகளோடு விளையாடி எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார் என்று டெல்லி நீதிமன்றத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ரெலிகர் பின்வெஸ்ட் லிமிடெட் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தொழிலதிபர் ஷிவிந்தர் 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவருக்கு ஜாமீன் வாங்கி தருவதாக கூறி ஷிவிந்தர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் தற்போது சுகேஷ் சந்திரசேகர் சிறையிலிருக்கிறார். சுகேஷ் சந்திரசேகர் பாலிவுட் நடிகைகள் பலருக்கு கோடிக்கணக்கில் பணம் செலவுச் செய்திருக்கிறார். சிறையில் இருந்து கொண்டே மாடல் அழகிகள், நடிகைகளை வரவழைத்து பரிசுப் பொருட்களை வழங்கியதாக தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் அதிகம் பயனடைந்ததாக கூறப்படும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், மோசடி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். இவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. மேலும், நடிகை நோரா ஃபஹேதி இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்படிருக்கிறார். அமலாக்கத்துறை மற்றும் டெல்லி காவல்துறை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் அவர் கொடுத்த வாக்குமூலம் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த வாக்குமூலத்தில், சுகேஷ் சன் டிவியின் உரிமையாளர் என்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்பு தான் ஒரு ரசிகர் என்று கூறி, நான் தென்னிந்திய படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறினார். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வீடியோ காலில் பேசிக்கொள்வோம். பேசும்போது ஒருமுறை கூட சிறையிலிருந்து பேசுவதாக என்னிடம் தெரிவித்ததில்லை. சுகேஷ் என்னுடைய உணர்ச்சிகளோடு விளையாடி என்னுடைய வாழ்க்கையையே நரகமாக்கிவிட்டார். கடைசியாக 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேசினோம். அதன்பிறகு தான் அவர் சிறையில் இருப்பது குறித்து தெரிந்துகொண்டேன்” என்று கூறியுள்ளார்.