வெற்றி பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என மாணவ, மாணவிகளிடம் நடிகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு வெள்ளை சட்டையில் வந்த விஜய்யை கண்ட அனைவரும் அரங்கம அதிர கூச்சலிட்டு அவரை வரவேற்றனர்.
பின்னர் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பேசிய விஜய், இதுவரை பல நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறேன். ஆனால் முதல்முறையாக இதுபோன்ற கல்வி நிகழ்ச்சியில் பேசுகிறேன். ஒரு பொறுப்புணர்ச்சி வந்ததைப் போல உணருகிறேன். நான் பள்ளியில் ஒரு சாதாரண மாணவன் தான். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களை பார்க்கும் போது என் பள்ளி காலங்களை நினைவுக்கு வருகிறது.
நீங்கள் நினைப்பதை உற்சாகத்தோடு செய்யுங்கள். உங்கள் மனது சொல்வதை கேட்டு நடங்கள். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றியடைந்தவர்கள் தோல்வியடைந்த மாணவர்களை சந்தித்து பேசுங்கள். படிப்படி எவ்வளவு எளிது என்று சொல்லி புரியவையுங்கள். அவர்களுக்கு உறுதுணையாக நில்லுங்கள்.
இவ்வாறு நடிகர் விஜய் கூறினார்.







