வாரிசுகளால் தமிழகம் வளர்கிறது, வாரிசுகளால் தமிழ்நாட்டில் ஏராளமான இளைஞர்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டையில் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அவர் பேசியதாவது;
நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் தான் இடம்பெற்றுள்ளன. தொழில்நுட்ப கல்லூரி விழாக்களில் காமராஜர், இந்திரா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வாரிசுகளால் தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர்
இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக எம்.ஐ.டி. விளங்குகிறது. ஏபிஜே அப்துல் கலாம் படித்த கல்லூரி என்பதை விட உங்களுக்கு வேறு பெருமை தேவையில்லை என்று நினைக்கிறேன். படிப்பவர்கள் அனைவரையும் பன்முக ஆற்றல் கொண்டவர்களாக எம்.ஐ.டி. வளர்த்தெடுத்து வருகிறது. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கல்வி, சுகாதாரத்தில் சிறந்து விளங்குவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். அதனால் தான் மாணவர்கள் பன்முக ஆற்றல் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தை கொண்டு வந்தோம்.
தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது அறிவாற்றலிலும் முதல் இடத்தை பெற வேண்டும். வாரிசுகள் நினைத்தால் பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும். வாரிசுகளால் தமிழ்நாட்டின் இளைய தலைமுறையின் சக்தியானது அறிவாற்றல் பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசின் சமூக நலத்திட்டங்களின் அனைத்து பயனையும் எம்.ஐ.டி. மாணவர்கள் பெற்று வருகின்றனர். அதி நவீன உள்விளையாட்டு அரங்கத்தோடு இணைந்த கலையரங்கம் கட்டுவதற்கு ரூ.50 கோடியும், கற்றல்வளாகம் மற்றும் பவளவிழா பூங்கா அமைக்க ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரம் பேர் அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் அரங்கம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியா என்று பெயரிடப்பட்டிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து, வாரிசு அரசியல் என்று பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் விமரிசித்திருந்ததற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா