மாநிலக் கல்வியை வகுக்க துணைக் குழுக்கள் அமைக்கப்படும் எனவும், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்கும் குழு தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.
மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பின் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அடுத்த கூட்டத்தை 26ஆம் தேதி நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முருகேசன், பணிகள் குறித்து முதற்கட்ட ஆலோசனை நடைபெற்றுள்ளது. துணைக் குழுக்கள் அமைக்க வேண்டியுள்ளது. பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆலோசனை பெற வேண்டும். ஆலோசனையை அறிக்கையாகத் தயார் செய்து பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்படும். வெளிப்படையான பணி இது. மாணவர்களுடைய எதிர்காலத்தை மனதில் வைத்தும், ஆசிரியர்களின் பணி, பள்ளி உட்கட்டமைப்பு உள்ளிட்ட பலவற்றை மனதில் வைத்து செயல்படுவோம் என்றார்.
இதுகுறித்து, நியூஸ் 7 தமிழுக்கு கல்வியாளர் ஜவஹர் நேசன் அளித்துள்ள பேட்டியில், கல்வியின் அங்கங்கள், சவால்கள், எதிர்காலம், வளர்ச்சிக்கான பங்களிப்பை வழங்கும் வகையில் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி, வகுப்பறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை அளவுகோலாக வைக்கவில்லை. தமிழ்நாட்டிற்காக கல்விக் கொள்கை வகுக்கப்படும். நமக்கான கொள்கையை வடிவமைப்போம். கல்விக் கொள்கை சிறப்பானதாக வர வேண்டும், தமிழ் மக்களுக்கான கல்விக் கொள்கையை வகுத்துக் கொடுங்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார். உலக அளவில் பரிந்துரைக்கக்கூடிய ஆவணமாக இருக்கும் வகையில் கல்விக் கொள்கையை உருவாக்குவோம் என கூறியுள்ளோம் என்றார்.
-ம.பவித்ரா