அனுமதி பெறாமல் முகாம்கள் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) முகாமின் போது 8-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைகுள்ளாக்கப்பட்டுள்ள விவகாரத்தில் பள்ளித் தாளாளர், முதல்வர் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்சிசி முகாம் எதுவும் நடத்தப்படவில்லை என தமிழ்நாடு புதுச்சேரி வட்ட என்சிசி இயக்குநரகம் விளக்கம் அளித்தது. இந்த நிலையில், இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:
- தனியார் பள்ளிகளில் அனுமதி பெறாமல் NCC உள்ளிட்ட முகாம்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை
- தனியார் சுயநிதிப் பள்ளிகளில் NSS, NCC SCOUT & GUIDE மற்றும் JRC போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன.
- அந்த அமைப்புகளை பள்ளிகளில் செயல்படுத்த மாநில அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
- அமைப்புகளின் செயல்பாடுகளை செயல்படுத்த மாநில அமைப்பு மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளியில் இருத்தல் வேண்டும்.
- முறையாக பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது.
- மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலமாகவும், மாணவிகளுக்குப் பெண் ஆசிரியைகள் மூலமாகவும் மட்டுமே பயிற்சிகள் வழங்க வேண்டும்.
- பள்ளிக்கு வெளியில் முகாம் நடத்தப்பட்டால் ஒவ்வொரு மாணவ, மாணவியரின் பொற்றோரிடமும் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற வேண்டும்.
- தனியார் பள்ளிகள் இந்த விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அந்தப் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.







