சென்னையில் குற்றங்களை தடுக்க ரூ.56 லட்சம் மதிப்பில் அதிநவீன வாகனம்

சென்னையில் நடைபெறும் குற்றங்களை தடுக்க சென்னை காவல்துறை ரூ.56 லட்சம் மதிப்புள்ள அதிநவீன வாகனத்தை வாங்க திட்டமிட்டுள்ளது காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு காவல்துறையில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்கவும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் பல்வேறு…

சென்னையில் நடைபெறும் குற்றங்களை தடுக்க சென்னை காவல்துறை ரூ.56 லட்சம் மதிப்புள்ள அதிநவீன வாகனத்தை வாங்க திட்டமிட்டுள்ளது காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னைக்கு காவல்துறையில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்கவும் குற்றச் செயல்களை
கட்டுப்படுத்தவும் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை காவல்துறையினர்
பயன்படுத்தி வருகின்றனர். சிசிடிவி கேமரா முதல் ட்ரோன் வரை முக்கிய பங்காற்றி
வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த நடமாடும் கட்டளை மற்றும்
கட்டுப்பாடு வாகனத்தை பயனபடுத்துவதற்கான ஆய்வை சென்னை காவல்துறை உயரதிகாரிகள் மேற்கொண்டனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு மற்றும்
கூடுதல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் அதிநவீன வாகனத்தை ஆய்வு செய்தனர். இந்த வாகனம் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளில் கண்காணிக்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 நவீன தொழில்நுட்பகள் கொண்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தெளிவான துல்லியமான காட்சிகளையும், இரவு நேரங்களில் கூட காட்சி பதிவு மேற்கொள்ளும் வசதி இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் 360 டிகிரி சுழன்று வீடியோ படம் எடுக்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 500 மீட்டர் தொலைவு வரை பொதுமக்களை கூட்டங்களில் கண்காணிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.


மேலும் ஐந்து கிலோ மீட்டர் வரை பறந்து சென்று கண்காணிக்கும் அதிநவீன
ட்ரோன்களும் இந்த வாகனத்தில் உள்ளதாகவும், வாகனத்தில் மூன்று காவலர்கள்
கணினியை வைத்துக் கொண்டு சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் ஆகியவற்றை
கொண்டு பொதுமக்கள் கூட்டத்தை கண்காணிக்கும் வசதியுடைய வாகனம் என
தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இதன் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து காவல்துறை கட்டுப்பாட்டு
அறைக்கும், பொதுமக்கள் கூடும் இடத்திற்கு அருகில் இருக்கும் காவலர்களுக்கு
தகவல் கொடுக்கப்படும். இதன் மூலம் அசம்பாவிதங்கள் எதுவும் நடந்தால் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் ஏஎன்பிஆர் கேமராக்கள்,
மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காணும் மென்பொருள் வசதிகளையும் கேமராவில்
பொருத்தி கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் ரூ.56 லட்சம் மதிப்புள்ள இந்த அதிநவீன வாகனத்தை வாங்குவதற்காக காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதுபோன்று பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை சென்னை காவல்துறையில் புதிதாக அமல்படுத்த உள்ளதாகவும் சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.