பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நம் நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச் சொத்து எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவை தொழில்மயமான, தற்சார்புடைய நாடாக நிலைநிறுத்துவதில் பொதுத்துறை நிறுவனங்கள் பல முக்கிய பங்கு வகிப்பவை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பதற்கு மாநிலங்களுக்குச் சொந்தமான அரசு நிலங்களோடு, மக்களின் நிலங்களும் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விலைமதிப்பற்ற அரசு சொத்துக்கள் ஒரு சில குழுக்கள், அல்லது பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதற்கே இந்த நடவடிக்கை வழிவகுக்கும் எனக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச்சொத்துக்களை தனியார் மயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.







