அமலாக்கத்துறையின் வழக்கு ஆவணங்களை வழங்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் கைது குறிப்பாணை, குற்றப்பத்திரிகை உள்ளிட்ட முழுமையாக ஆவணங்களை வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 14 தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யபட்டார். இந்த வழக்கில் கடந்த திங்கள்கிழமை அன்று அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கதுறைக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் அனுமதியை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 7ம் தேதி இரவு முதல் அமலாக்க துறை காவலில் எடுத்து விசாரித்தது. அமலாக்கதுறை காவல் முடிந்த நிலையில் ஆகஸ்ட் 25 தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை 3000 பக்கங்கள் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து அமலாக்கதுறை வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக இதுவரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் தர கோரி செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் தரப்பில் நீதிபதி அல்லியிடம் முறையீடு செய்துள்ளார்.







