தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடி அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்…

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடி அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். நேற்று மாலை கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களின் படகின் மீது ஏறி படகில் இருந்த மீனவர்களை சரமாரியாக தாக்கி அவர்கள் பிடித்தது வைத்திருந்த மீன்களை பறித்து சென்றனர்.

மேலும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மைக்கேல் ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைபடகையும் அதில் இருந்த கிளிண்டன், பேதுகு, வினிஸ்டன், தயான், மரியான், தானி, ஆனஸ்ட் ஆகிய ஏழு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று அவர்களிடன் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்கள் அனைவரும் இன்று யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோலவே நேற்று மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் தடுத்து விரட்டி அடித்ததுடன், நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர். இதனால் மீன் பிடிக்க சென்ற படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.