இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தம்பியும், நிதி அமைச்சருமான பசில் ராஜபக்சேவை விமர்சித்த இரண்டு அமைச்சர்களை அதிரடியாக பதவி நீக்கம் செய்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

குறிப்பாக அரிசி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாமல் இலங்கை அரசு திணறி வருகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு உதவி வருகின்றன.

அதே நேரத்தில், மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு என இலங்கை மக்கள் தொடர்ச்சியாக இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுபோன்ற பிரச்சனைகள் அனைத்திற்கும், நிதி அமைச்சரும், பிரதமர் மகிந்த ராஜபக்சே தம்பியுமான பசில் ராஜபக்சேதான் காரணம் என மின் துறை அமைச்சர் உதய கம்மன்பில மற்றும், தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதனையடுத்து இந்த இரு அமைச்சர்களையும் பதவி நீக்க செய்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்விரு அமைச்சர்களும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







