பிரிட்டனில் பொதுமக்களில் 18 பேரை தாக்கியதால் சாம்பல் அணில் கருணைக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரிட்டனில் பிளின்ட்ஷயரில் உள்ள பக்லியில் சாம்பல் அணில் ஒன்று கடந்த சில நாட்களில் 18 பேர்களை கடித்துள்ளது. இதையடுத்து கால்நடை மருத்துவரால் பிடிக்கப்பட்ட அணில் பிரிட்டன் சட்டப்படி கருணைக் கொலை செய்யப்பட்டது. சாம்பல் அணில்கள் கடந்த 1870ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்டன. இது ஏற்படுத்திய பாதிப்புகளால் இந்த வகை அணில்களை காட்டுக்குள் விட அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதையடுத்து பிடிக்கப்படும் இந்த வகை அணில்கள் கருணை கொலை செய்யப்பட்டு வருகிறது.
அந்தப்பகுதியை சேர்ந்த மக்களால் ஸ்ட்ரைப் என அழைக்கப்பட்ட இந்த அணில் முதலில் தானியங்களை சேதப்படுத்தி வந்த நிலையில், திடீரென பொதுமக்களை கடிக்க தொடங்கியது. இதனால் 18 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அந்த அணிலை பொதுமக்கள் அளித்த புகாரால் கருணை கொலை செய்யப்பட்டது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, முதலில் எனது தோட்டத்தில் உள்ள தானியங்களை சேதப்படுத்தி வந்த அணில் திடீரென ஒருநாள் என்னை கடித்து விட்டது. அதனால், எனக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கூட வந்து விட்டது என தெரிவித்தார்.
இவரையடுத்து பேசிய ஒருவர், ஸ்ட்ரைப் முதலில் என்னை கடித்ததுடன் என்னை சந்திக்க வந்த எனது நண்பனையும் தாக்கியது. இதனால், வீட்டை விட்டு வெளியே செல்லவே பயமாக இருந்தது. இதனால்தான், அணில் கடித்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டேன் என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.