Sorry.. எனக்கு எதுவும் தெரியாதுங்க.. – Hema Committee Report குறித்து #ActorRajinikant பேட்டி!

மன்னிக்கவும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான…

மன்னிக்கவும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த 19-ம் தேதி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. கேரள திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் இந்த அறிக்கை பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரள உயர்நீதிமன்றமும் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

This image has an empty alt attribute; its file name is postcard-2024-08-25T121906.585.webp

இதன் தொடர்ச்சியாக நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக  குற்றம்சாட்டினார். இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்கியதை தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டினார். இதன் பின்னர் மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜிநாமா செய்தார். அதேபோல், கேரள கலாசித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் இயக்குநர் ரஞ்சித் விலகினார்.

இதற்கிடையே, நடிகைகள் ஒவ்வொருவராக, நடிகர்கள் தங்களுக்கு தந்த பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியம்பிள்ளை ராஜூ, நடிகர் இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மினு முனீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

This image has an empty alt attribute; its file name is postcard-2024-08-29T100228.759.webp

இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்க (அம்மா) தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜிநாமா செய்தனர். இதன் பின்னர் விசாரணைக் குழுவில் நடிகைகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித், நடிகர் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட மலையாள உச்சநட்சத்திரங்கள் மட்டுமல்லாது பிற மொழி சினிமா கலைஞர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிகையாளர்கள் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த்.. மன்னிக்கவும் எனக்கு ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி எதுவும் தெரியாது என தெரிவித்துவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.