பிச்சைக்காரன் படத்தின் 3-ஆம் பாகம் எடுக்கவுள்ளதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ திரைப்படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கத்தில் அவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ படம், சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 கடந்த வாரம் வெளிவந்தது.
இதில் விஜய் ஆண்டனி நடித்ததோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், பிச்சைக்காரன் படத்தின் 3-ஆம் பாகம் எடுக்கவுள்ளதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 3-ம் பாகத்தின் திரைக்கதை முற்றிலும் வித்தியாசமான கதையம்சத்தில் இருக்கும் என்றும் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசியபோது தெரிவித்திருக்கிறார்.







