ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் தடை விதித்து முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல்வேறு உயிரிழப்புகள், கொலைகள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், ஆன்லைன் சூதாட்டத்தினால் படித்தவர்களும், வங்கி அதிகாரிகளும் உயிரிழப்புக்கு ஆளாவதாக செய்திகளில் படிப்பதாகவும் இதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் முழுமையாக இல்லை என்று கூறி கடந்த மாதம் 3ம் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அந்த வழக்குகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.