“இன்னா படத்த இன்னா தியேட்டர்ல வோண்ணா போடு.. ஆனா ரோகினின்னும் போது தல தான்..அமுக்கு டுமுக்கு அமால் டுமால் தான்! இன்னா தல..!?” எனும் சென்னை மண்ணின் குரல் தான் சிவகார்த்திகேயனின் டான் படத்திற்கான முதல் ஓப்பனிங் என்று சொல்லலாம். அஜித் படத்திற்கு தியேட்டருக்கு சென்ற அவரின் வெறித்தனமான ரசிகரின் இந்த குரல் இணையம் முழுவது வைரலானதோடு ஆல் டைம் மீம் டெம்ப்ளேட்டாகவும் மாறியது.
இளையராஜா போலவே மக்கள் இசைகளை கையில் எடுத்து அதில் தன் வண்ணங்களை பூசி திரையில் அடித்து நொறுக்குவது அனிருத் ஸ்டைல். அந்த வரிசையில் சென்னை இளைஞரின் இந்த குரலை அப்படியே எடுத்து தன்னுடைய இசையில் கோர்த்து ‘ஜலபுல ஜங்கு’ என பொளந்து கட்டினார் அனிருத். இந்த பாடல் வெளியானதில் இருந்தே இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கல்லூரி விழா, திருமண விழா, அலுவலக விழா என எல்லா இடங்களிலும் போட்டு bad vibeகளை விரட்டி good vibeகளை அடைந்தனர். திரையரங்குகளிலும் மற்ற நடிகர்களின் படங்கள் ஓடும் போது கூட இடைவேளையில் இந்த பாடலை சொருகி ஆடியன்ஸை vibe செய்ய வைத்தனர்(Vibe என்றால் ஜலபுல ஜங்கு பாடலை கேட்கும்போது ஏற்படும் உற்சாக உணர்வு என்று புரிந்துகொள்ளலாம்).
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் டான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக திரையரங்குகளை அலங்கரித்தது. பள்ளி கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய ஜாலியான படம் என்பதால் இளைஞர்களிடையே படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்ப்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளதாகவே விமர்சனக்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், முதல் நாள் முதல் காட்சியை காண நடிகர் சிவகார்த்திகேயன் அதிகாலையிலேயே ரோகினி தியேட்டருக்கு சென்றிருந்தார். சிவாவை பார்த்த இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் அனைவரும் Sk..sk.. என கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தூரத்திலிருந்து தொடங்கும் பேண்டு வாத்தியத்தின் ஒலியை கேட்டதுமே அனைவரும் ஷோல்டரை ஆட்டிக்கொண்டே சீட்டிலிருந்து எழுந்தனர். ஹே ஜலபுல ஜங்கு என தொடங்கும்போது தியேட்டரில் நடனங்களுடன் விசில்கள் பறக்கத்தொடங்கின. ‘ரெமோ’ படத்தில், ‘நீ வேண்ணா பாரு நான் பெரிய நடிகனாகி ஸ்கிரீன்ல ஆடுவேன்.. தமிழ்நாடே ஆடும்’ என நகைச்சுவையுடன் பஞ்ச் அடித்திருப்பார். அந்த மேஜிக் ஜலபுல ஜங்கு பாடலில் அரங்கேறியது. முந்தைய படங்களை விட சிவகார்த்திகேயனின் நடனத்தில் அதிக வேகம் மற்றும் உற்சாகத்தோடு perfection-ம் கூடியிருந்தது. தளபதி ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால் ‘அவரு புடிச்சிட்டாருங்க youth and family ஆடியன்ஸை புடிச்சிட்டாரு’.
ரோகினியில் இருந்து தொடங்கிய அமுக்கு டுமுக்கு அமால் டுமால் பாடலை ரோகினியிலேயே ரசிகர்களுடன் கண்டுகளித்த சிவகாத்திகேயன், அவர்களின் கொண்டாட்டங்களையும் மகிழ்ச்சியுடன் வீடியோ எடுத்துக்கொண்டார். இதுவரை படத்தை பார்த்த பெரும்பாலானோர் சூப்பர் மற்றும் சுமார் என்றே விமர்சித்து வருகின்றனர். படம் ‘மொக்கை’ என்ற ரகத்தில் வராத நிலையில் ‘டான்’ திரைப்படம் இந்தாண்டின் சூப்பர் ஹிட் லிஸ்டில் சேர்ந்துகொண்டது என்று சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். இன்று இரவுக்குள் ஒரு சில நடிகரின் ட்விட்டர் அக்கவுண்டுகள் ‘hack’ செய்யப்பட்டு, ‘யாரெல்லாம் மாஸ் பண்றதுன்னு வெவஸ்த இல்லாம போச்சி’ என்று ட்வீட்டுகள் வரலாம் என்றுகூட எதிர்ப்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ சிவகார்த்திகேயனின் கேரியரில் மற்றுமொரு அமுக்கு டுமுக்கு அமால் டுமால் வெற்றி!