கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும்போட்டி நிலவியது.
இருவரும் டெல்லிக்குச் சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேசினர். அதைத்தொடர்ந்து, ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த 3 நாட்களாக முதலமைச்சரை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்ட நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்க உள்ளளார். துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்க உள்ளார். பெங்களூருவில் நாளை மறுநாள் நண்பகல் 12 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் வெளியிடுவார் என தெரிகிறது.








