மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் இல்ல சமையல் பணியாளரின் பேஸ்புக் பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு 48 ஆண்டுகளாக உதவியாளராக இருந்த சண்முகநாதன் உடல்நல குறைவால் நேற்று முன் தினம் காலமானார். திமுகவினர் மற்றும் அனைத்து தரப்பினரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை அவரது வீட்டிற்கு சென்றும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கருணாநிதி மறைவுக்கு பிறகும் அவரது கோபாலபுர இல்லத்தின் முன் அறையின் ஒரு பகுதியில் ஆவணங்கள் தொகுக்கும் பணியில் தாமாகவே ஈடுபட்டு வந்தார் சண்முகநாதன். சில நாட்களாக உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது கருணாநிதி இல்ல சமையலராக உள்ள முத்து செல்வம் பிரகாஷின் பேஸ்புக் பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில், சண்முகநாதன் அமர்ந்து பணியாற்றிய இடத்தை புகைப்படமாக வெளியிட்டு ‘அண்ணன் இல்லாத இடம்’ என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். பொதுவாக நம்மோடு பயணித்தவர்கள் மரணிக்கும்போது அவர்கள் இருந்த இடத்தை நாம் மீண்டும் பார்க்கும் போது அவர்களின் நினைவுகள் நம்மை சோகத்திற்கு உள்ளாக்கும்.
– மா.நிருபன் சக்கரவர்த்தி