தொடர்ந்து 3 சிக்ஸ் அடிக்கும் படி பந்துவீசிய தனது மருமகன் ஷாகின் ஷாவை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிதி விளாசியுள்ளார்.
டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. லீக், நாக் அவுட் போட்டிகள் முடிந்து இறுதிப் போட்டி நாளை நடக்கிறது. இந்நிலையில் நேற்றுமுன் தினம் நடந்த அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் -ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, ஒரு கட்டத்தில் தோற்கும் நிலையில் இருந்தது. கடைசி கட்ட ஓவர்களில் ஸ்டோயினிஸும் விக்கெட் கீப்பர் மேத்யூ வேடும் அதிரடியாக ஆடி, அந்த அணியை வெற்றி பெற வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
19 வது ஓவரை, பாகிஸ்தான் வீரர் ஷாகின் ஷா அப்ரிதி வீசினார். அந்த ஓவரின் 3 வது பந்தை வேட் தூக்கி அடித்தபோது எளிதாக வந்த கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி வீணடித்தார். அதற்கடுத்த 3 பந்துகளில் தொடர்ந்து, 3 சிக்சர் அடித்த வேட், ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறவைத்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது.
இந்நிலையில் ஹசன் அலியால் பாகிஸ்தானின் இறுதிப் போட்டி வாய்ப்பு பறிபோனதாக பாகிஸ்தான் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஷாகித் அப்ரிதி கூறும்போது, ஹசன் அலி கேட்ச்-சை விட்டார் என்பதற்காக, 3 சிக்சர்களை அடிக்கும்படி பந்து வீசுவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
அவர் கூறும்போது, ஷாகின் ஷா அப்ரிதி பந்துவீசிய விதத்தில் எனக்குத் திருப்தியில்லை. அவர் வேகமாக பந்துவீசுபவர். அந்த வேகத்தை அவர் விவேகமாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும். அவுட் சைட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியிலும் வேகமான யார்க்கர்களையும் அவர் வீசியிருக்க வேண்டும். இந்த டி-20 உலகக் கோப்பைத் தொடரில் அவர் புத்திசாலித் தனமாக பந்துவீசியிருக்கிறார். புதிய பந்துகளில் வாசிம் அக்ரம், முகமது ஆமீர் இப்படி பந்துவீசுவதைப் பார்த்திருக்கிறேன். இந்த அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் அவர் தன்னை தயார்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன் என்றார்.
அப்ரிதியின் மூத்த மகளைதான் ஷாகின் ஷா அப்ரிதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.