கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் சாவித்ரி கண்ணன் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குபதியவில்லை என்றும் விடுவித்துவிட்டோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காவல்துறை சார்பில் வெளியிட்டிருந்த கடிதத்தில் இருப்பது மாணவியின் கையெப்பம் இல்லை என மூத்த பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் இணையதலங்களில் கருத்து பதிவிட்டிருந்தார்.
மேலும் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அவர் தொடர்ந்து பதிவு செய்து வந்தார். இதையடுத்து, இன்று சைபர் கிரைம் போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். அவரது கைதுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில், இது குறித்து காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர். அதில், பத்திரிக்கையாளர் சாவித்ரி கண்ணனிடம் 2 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் அவரை, அவரது வழக்கறிஞருடன் அனுப்பி வைத்துவிட்டதாகவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யபடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
-இரா.நம்பிராஜன்








