92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, உதவி ஆணையாளர் (வணிகவரித்துறை), துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) உள்ளிட்ட 66 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வுக்கான முடிவுகள் கடந்த 15ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் செங்கல்ப்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற இளம்பெண் ஒருவர் முதல் இடம் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார்.
இந்த நிலையில், துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆகஸ்ட் 27ந்தேதி முதல் 29ந் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். வரும் அக்டோபர் 30-ம் தேதி குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் முதன்மைத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








