காதலனின் பிரிவை தாங்க முடியாத பள்ளி மாணவி கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட
சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் சீமான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ரோஷினி என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் ரோஷினி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையிலுள்ள மின் விசிரியில் சேலையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்
கொண்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பள்ளி சென்று திரும்பிய அவரது அண்ணன் தங்கை தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் ரோஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இதுகுறித்து விசாரணையில் போலீஸார் ஈடுபட்டனர். அதில் அவர்களுக்கு பல அதிர்ச்சிகலந்த உண்மைகள் தெரிய வந்தது.

பஞ்சவர்ணம் குடும்பத்தினர் இதற்கு முன்னதாக ராமநாதபுரம் ஓரியூர் அருகே வசித்து வந்துள்ளனர். அறியாத மொழி கிராமத்தை சேர்ந்த திலீபன் என்பவர் இவர்கள் வீட்டின் அருகே உள்ள தனது சித்தி வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது திலீபனுக்கும் ரோஷினிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென ஒருநாள் ரோஷினி தன் வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் எஸ்.பி பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் இருவரையும் மீட்டதுடன் ரோஷினியை பஞ்சவர்ணத்திடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தினால்தான் பஞ்சவர்ணம் தன் மகன், மகளுடன் தேவக்கோட்டைக்கு மாறி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் மீண்டும் ரோஷினி மாயமாகியுள்ளார். இதனையடுத்து தனது மகளை மீட்டுத்தரக்கோரி தேவக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பஞ்சவர்னம்.
இருவரையும் தேடிவந்த காவல்துறையினர் அவர்களை கண்டுபிடித்து பெறோரிடம் அனுப்பும் முன் அறிவுரை வழங்குவதற்காக சிவகங்கையிலுள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். கொரோனா ஊரடங்கிற்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால், முகாமிலிருந்து வீட்டிற்கு வந்து பள்ளிக்கு சென்றுள்ளார் மாணவி ரோஷினி. பள்ளி சென்றபோதும் திலீபனின் நினைவாகவே அவர் இருந்து வந்ததாகவும், இதனால் அவரது தாயார் அவரை கண்டித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பஞ்சவர்ணம் வெளியில் சென்றிருந்த நேரத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி வீட்டிலிருந்த ரோஷினி அறையில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். காதலனின் பிரிவை தாங்க முடியாத பள்ளி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.