காரைக்குடியில் முகக் கவசம் அணிந்தாலும், நகராட்சி அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அபராதம் விதிப்பதாக அப்பகுதி வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் கட்ட அலை வீசி வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இதனால் வியாபாரிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். ஆனால் நகராட்சி துறை அதிகாரிகள் வியாபாரிகளிடம் முககவசம் ஒழுங்காக அணிவதில்லை என்று கூறி வலுக்கட்டாயமாக ரூ.200 அபதாரம் விதித்துள்ளனர். இதனால் வியாபாரிகள் மற்றும் அதிகாரிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவு அறிவித்த நிலையில் வியாபாரிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வியாபாரம் செய்து வருவதாகவும், நகராட்சி துறை அதிகாரிகள் முகக்கவசம் அணிந்தாலும் வலுக்கட்டாயமாக அபதாரம் வசூல் செய்வதாகவும் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.







