இரண்டாவது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் தலைநகருக்குள் ரஷ்ய படைகள் நுழைந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இரண்டாம் நாளாக இன்றும் நீடித்து வருகிறது. தரைப்படை மற்றும் விமானப்படை மூலம் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. உக்ரைனின் ராணுவ நிலைகள் ஏவுகணை மூலமும் நிர்மூலமாக்கப்பட்டு வருகின்றன. ரஷ்ய படைகளை எதிர்த்து நிற்கும் வலிமை, உக்ரைன் படைகளுக்கு இல்லாததால், ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வருகின்றன. உக்ரைனின் மையப் பகுதிக்கு ரஷ்ய படைகள் வந்துவிட்டதாகவும், தலைநகர் கீவ்-ஐ அவர்கள் சுற்றி வளைத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, உக்ரைனில் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உக்ரைன் மக்கள் மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து உக்ரைனுக்கு வந்தவர்களும் தற்போது அச்சத்தின் பிடியில் உள்ளனர். ரஷ்யாவின் தாக்குதல் பகுதிகளை முன்கூட்டியே அறிந்து, அங்குள்ள பொதுமக்களுக்கு சைரன் ஒலி மூலம் உக்ரைன் அரசு எச்சரிக்கை விடுத்து வருகிறது. சைரன் ஒலி கேட்டதும், பொதுமக்கள், பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்று தங்களை தற்காத்து வருகின்றனர்.
பெரும்பாலான சுரங்க மெட்ரோ ரயில் நிலைங்கள், பதுங்குக் குழிகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு கருதி, ஏராளமான பொதுமக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர். கார் மற்றும் ரயில்கள் மூலம் அவர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வருவதால், பல்வேறு நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.