முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு பெற்றதை புகழ்ந்து பேசிய பாமக எம்எல்ஏ ஜிகேமணி, எதிர்க்கட்சிகளை அன்போடு நேசிக்கும் மரபு முதலமைச்சரிடம் உள்ளது என தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, மனிதவள மேலாண்மைத்துறை, மீதான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது. மேலும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையும், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் புகழ்ந்து பேசினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்தவகையில், பாமக எம்எல்ஏ ஜிகேமணி பேசும்போது, கொரோனா காலத்தில் மக்களின் உயிரைக் காத்த மகத்தான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார். 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைப் பார்த்து பெருமைப்படுவதாக கூறிய அவர், மு.க.ஸ்டாலினை தான் இன்றோ, நேற்றோ பார்க்கவில்லை என்றும் முன்பிருந்தே பார்த்து வருவதாகவும் புகழ்ந்து பேசினார்.
தன் 16 வயதில் பொதுவாழ்க்கையைத் தொடங்கியவர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்த அவர், பழுத்த அரசியல் அனுபவம் உடையவர் ஸ்டாலின் என்றும் கூறினார். அனுபவமிக்க, நல்ல அமைச்சரவையைக் கொண்டு முதலமைச்சர் நிர்வாகம் செய்துவருகிறார். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் எங்களை அன்போடு நேசிக்கும் நல்ல மரபை ஆளுங்கட்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இது எமது அரசு அல்ல ; இது நமது அரசு ; மக்கள் அரசு என்று முதலமைச்சர் சொல்வதை பெருமையுடன் பார்ப்பதாக கூறிய ஜி.கே.மணி, கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கும் முதலமைச்சர் வழங்கிய திட்டங்கள், அவரது பரந்த மனப்பான்மையை காட்டுகிறது என்றார்.
இன்று வெளியிடப்பட்டுள்ள 5 அறிவிப்புகள் சாதாரணமானது அல்ல என்ற அவர், ராமதாஸின் 42 ஆண்டுகால போராட்டத்துக்கு செயல்வடிவம் தர நடவடிக்கை எடுத்துவருவது பாராட்டத்தக்கது என்றார். ஏராளமான நலத்திட்டங்களைப் பார்த்து விட்டு எதையும் பேசாமல் இருக்க முடியாது. ராஜாஜி அமர்ந்த இருக்கையில் அமரும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைத்துவிடுமா? பரந்த நோக்கம், நல்ல சிந்தனை, நல்ல சொல், நல்ல செயல் முதலமைச்சருக்கு இருக்கிறது, திமுக அரசின் ஓராண்டு சாதனையை பாமக பாராட்டி வாழ்த்துவதாக தெரிவித்த ஜி.கே.மணி, முதலமைச்சரின் பணி தொடரட்டும் ; மக்கள் மனம் மகிழட்டும் என்று உரையை முடித்தார்.