கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 திட்டம் – அவகாசம் நீட்டிப்பு

கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.   காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி முதல் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும்…

கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி முதல் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயர் கல்வித்துறை தெரிவித்திருந்தது. உதவிதொகை பெறும் மாணவிகள் அரசுப்பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டியது கட்டாயம் எனவும் உயர் கல்வித்துறை குறிப்பிட்டிருந்தது.

 

அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும் மாணவியரில், அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தோரின் விபரங்களை அனுப்புமாறு, இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. மேலும் புதிய கல்வியாண்டில் கல்லூரிகள் திறந்ததும், உதவித் தொகை வழங்கும் பணி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடந்த 10-ம் தேதியுடன் அவகாசம் முடிவுற்ற நிலையில், நாளை முதல் வரும் 18-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏதேனும் மாணவியின் பெயர் விடுபட்டால், அதற்கு சார்ந்த கல்லூரி முதல்வரே முழு பொறுப்பு என தெரிவித்துள்ளது.

மேலும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்து தற்போது கல்லூரிகளில் பயிலும் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு, 4-ம் ஆண்டு மாணவியருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இதற்காக கடந்த 10-ம் தேதி வரை 3,58,304 மாணவியர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.