நெருக்கடியை சரியாக கையாள தவறியதாலேயே டி-20 உலக கோப்பை அரை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இன்று அடிலெய்டு நகரில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி நிர்ணயித்த 169 என்கிற வெற்றி இலக்கை 16 ஓவர்களிலேயே எட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இங்கிலாந்தை அரை இறுதியில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்ளும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை இந்த போட்டி கொடுத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்திய அணியின் இந்த படுதோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அணியின் கேப்டன் ரோகித் சர்மா, நாக்அவுட் சுற்றில் நெருக்கடியை எப்படி சமாளிக்கிறோம் என்பதுதான் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்றார். நெருக்கடியை சமாளிப்பது எப்படி என யாருக்கும் கற்றுதர முடியாது என காட்டமாக கூறிய ரோகித் சர்மா, இன்றைய போட்டியில் பங்கேற்ற இந்திய அணி வீரர்கள், அதிக நெருக்கடிகளை சந்தித்து விளையாடக் கூடிய ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று போன்ற போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள்தான் என்றார். அவர்கள் நெருக்கடியை கையாளும் திறன் பெற்றவர்கள்தான் என்றும் அவர் கூறினார்.
”கடைசி கட்டத்தில் இன்னும் சிறப்பாக பேட் செய்து அதிக ரன்களை இந்திய அணி குவித்திருக்க வேண்டும். அதே நேரம் அணியின் பந்துவீச்சும் சிறப்பாக அமையவில்லை. 16 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை தொடும் அளவிற்கு அடிலெய்டு ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் அல்ல. பந்து வீச்சின் தொடக்கமே சிறப்பாக அமையவில்லை. கொஞ்சம் பதற்றத்துடனேயே பந்துவீச்சு இருந்தது. அதே நேரம் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பாக விளையாடியதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்” என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.