மொத்த கதையும் தூள் தூளா கிழிஞ்சிடுச்சி!

அறிவியலாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ராகெட்ரி: நம்பி விளைவு (Rocketry: The Nambi Effect) எனும் திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார் நடிகர் மாதவன். 75வது கேன்(cannes) திரைப்பட விழால் இப்படத்தின் சிறப்பு…

அறிவியலாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ராகெட்ரி: நம்பி விளைவு (Rocketry: The Nambi Effect) எனும் திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார் நடிகர் மாதவன். 75வது கேன்(cannes) திரைப்பட விழால் இப்படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாதவன், ‘ இந்திய சினிமாவில் அறிவியல் மற்றும் தொல்நுட்பம் சார்ந்த அசாதாரனமான கதைகளையும், தலைசிறந்த மனிதர்களையும் புறக்கணித்துள்ளார்கள். நம்முடைய நடிகர்களை விட அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆளுமைகளுக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். ஆர்யபட்டா முதல் சுந்தர் பிச்சை வரை மக்களின் மனம்கவர்ந்த பல்வேறு ஆளுமைகள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை படமாக்கினால் நிச்சயம் மக்கள் கொண்டாடுவார்கள்’ என்று குறிப்பிட்டார்.

1994ம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி கிரியோஜெனிக் இந்திய ராக்கெட் இன்ஜின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாகக்கூறி கைது செய்யப்பட்டார் நம்பி நாராயணன். இவர் இஸ்ரோவின் முன்னாள் முக்கிய அதிகாரி ஆவார். வாயுக்களை திரவமாக மாற்றி அதை எரிபொருளாக பயன்படுத்துவது கிரியோஜெனிக் டெக்னாலேஜி ஆகும். அப்துல்கலாம் திடப்பொருட்களை எரிபொருளாக பயன்படுத்தி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்த போது, திரவ எரிபொருள் பயன்படுத்துவது குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டிருந்தார் நம்பி நாராயணன்.

இவர் கைது செய்யப்படும்போது இந்திய விஞ்ஞானி பாகிஸ்தானுக்கு ரகசியங்களை விற்றுவிட்டார் என பரபரப்பாக பேசப்பட்டது. நீதிமன்றதுக்கு அவரை அழைத்துச்செல்லும் போது அவரை சூழ்ந்த பொதுமக்கள் ‘தேச துரோகி.. தேச துரோகி ’ என கோபமாக கோஷமிட்டனர். ஒரே நாளில் அவரின் புகழ் அனைத்தும் சிதைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கேரள புலனாய்வுத் துறையிடம் இருந்து மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) இந்த விசாரணையை எடுத்துக் கொண்டது.

1996-ம் ஆண்டில் இது கேரள காவல்துறையால் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு எனவும் நம்பி நாராயணன் நிரபராதி எனவும் சி.பி.ஐ அறிக்கை அளித்தது. இதனைத்தொடர்ந்து நம்பி நாராயணனை விடுவித்தது நீதிமன்றம். அதற்குள்ளாக அவரின் பெயரும் புகழும் முற்றிலுமாக சிதைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 50 நாட்கள் சிறையில் இருந்தார் நம்பி. சிறையில் இருந்தபோது தான் அடித்து துன்புறுத்தப்பட்டதுடன் பல்வேறு சித்தரவதைகளுக்கும் ஆளானதாக ‘Orbit of memories’ என்கிற தன் சுயசரிதை புத்தகத்தில் எழுதியிருந்தார் நம்பி. மேலும், ‘எனக்கு நேர்ந்தவை எல்லாம் ஏதோ ஒரு திரைப்படம் பார்ப்பது போலவும்.. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நானே இருப்பது போலவும் எனக்குத் தோன்றியது’ எனவும் அவர் குறிப்பிட்டார். அன்று அவர் நினைத்தது போலவே தற்போது நம்பியின் அறிவியல் வாழ்க்கை நடிகர் மாதவனால் திரைப்படமாக உருவாக்கப்பட்டு வரும் ஜூலை 1ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் நடிகரும், இயக்குநருமான மாதவனின் ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு செய்தி பகிரப்பட்டிருந்தது. அதில் ராகெட்டரி: நம்பி விளைவு படத்தின் கதையை விஞ்ஞானியை பார்த்த பிற்கு மாற்றி எழுதியதாக போடப்பட்டிருப்பதை பார்த்து அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவரின் விரிவான பேட்டியை படித்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நடந்த சம்பவத்தை மாதவன் இப்போது பகிர்ந்துள்ளார் என தெரியவந்தது.

அந்த பேட்டியில், ‘பொய் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால் நம்பி நாராயணன் உடைந்து அழுத காட்சிகளை பார்க்க நேர்ந்தது. அப்போதே அவரை பற்றிய திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது. படத்தின் திரைக்கதையை எழுதி முடித்துவிட்டு நம்பி நாராயணனை சந்தித்த பிறகுதான் பல உண்மைகளை அறிந்துகொண்டேன். அவர் அமெரிக்காவின் league university-யின் முன்னாள் மாணவர், அப்துல் கலாமுடன் வேலை செய்தவர் உள்ளிட்ட தகவல்களை அதன்பிறகுதான் அறிந்துகொண்டேன். அவரிடம் பேசும்போது நான் ஏற்கனவே எழுதிவைத்திருந்த படத்தின் script தூள் தூளாக கிழிக்கப்படுவதை என்னால் உணரமுடிந்தது. இதன்பிறகு அவர் கொடுத்த தகவல்களை கொண்டு மீண்டும் இப்படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.