எட்டையபுரம் அருகே அதிகாலை நேரத்தில் நடந்த சாலை விபத்தில் தாய் மகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்களுடன் மணிகண்ட ராஜா என்பவர் மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மூவரும் சோழபுரம் அருகே சென்று கொண்டு இருந்த போது அவ்வழியாக சென்ற சரக்கு லாரி, இவர்களின் 2 சக்கர வாகனத்தின் மீது மோதியது. நிலை தடுமாறியதில் 3 பேரும் கீழே விழுந்தனர்.
மோதிய வேகத்தில் சரக்கு வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி 2 பெண்களும், சம்பவ இடத்திலே பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மணிகண்டராஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த 3 பேரும் உறவினர்கள் என்பதும், காரைக்குடியைச் சேர்ந்த மாரியம்மாள் அவரது மகள் கன்னிசெல்வி மற்றும் மாரியம்மாளின் அக்கா கணவர், மணிகண்டராஜா என்பதும் தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் போலீசார் விசாரித்து வருகின்றனர்.









